22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா.

Filed under: தமிழகம் |

22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருவதுடன் கோவில் யானை அகிலா செய்யும் சேட்டைகளை ரசிக்கவும் வருகிறார்கள்.

யானை அகிலா 2002 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இக்கோவிலில் யானை அகிலா கடந்த 12 வருடங்களாக இறை பணியாற்றி வருகிறது.

அகிலா குளிப்பதற்கு கோவில் நந்தவனத்தில் நீச்சல்குளம், நடைபாதை மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகிலாவுக்கு 22-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அகிலாவிற்கு மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகிலாவுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள், பொறி பொட்டுக்கடலை, மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அகிலாவின் பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர்.