அசானி புயல் உருவாகிறது

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10ம் தேதி வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும். புயலின் எதிரொலியாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.