ஆளுநருக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஆளுநர் ஆர்.என்.ரவியை “ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல!” என டி.ஆர்.பாலு அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக பொருளாளர் எம்.பி டி.ஆர்.பாலு “தமிழ்நாடு, தமிழர், தமிழ் போன்ற வார்த்தைகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கசப்பாக இருக்கின்றன. பீகாரும், உத்தரப்பிரதேசமும் இன்று எப்படி இருக்கின்றன? தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது தெரியாதா? தமிழ்நாடு வளர்ந்திருப்பதை கண்டு எரிச்சலடையும் சிலரில் ஆளுநரும் ஒருவராக இருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழக பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் போதும். ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.