உறுதிமொழி எடுக்க தடுமாறிய நாம் தமிழர் வேட்பாளர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கௌசிக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார்.

வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சமீபத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கௌசிக் போட்டியிடுகிறார். இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். அதைத்தொடர்ந்து தேர்தல் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் வாசிக்க பின் தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். டாக்டார் கௌசிக் ஓமன் நாட்டில் படித்தவர் என தகவல் வெளியாகிறது. சீமான் தூய தமிழில் மேடைகளில் முழங்கி வருகிறார். வேட்பாளர் தமிழில் படிக்கத் திணறியுள்ளது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அவர் தமிழில் பேசுவார் என்று அவருக்கு ஆதரவாகவும் கூறி வருகின்றனர்.