கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவா?

Filed under: இந்தியா |

கபடி விளையாட்டு வீராங்கணைகளுக்கு கழிவறையில் உணவு அளிக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஷாகரன்பூரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வீராங்கணைகள் வந்திருந்துள்ளனர். அங்கு வீராங்கணைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. சிறுநீர் கழிக்கும் சிங்க் அருகே தட்டில் உணவு வகைகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு பதார்த்தம் வெறும் பேப்பரில் தரையில் வெறுமனே வைக்கப்பட்டுள்ளது. வீராங்கணைகளும், உடன் வந்தோரும் வேறு வழியின்று அவ்வுணவை சாப்பிட எடுத்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்கமளித்துள்ள ஷாகரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா, அது கழிவறை அல்ல என்றும், நீச்சல் குளம் அருகே உள்ள உடைமாற்றும் அறை என்றும் கூறியுள்ளார். மைதானத்தில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் மழை பெய்ததால் சமைத்த உணவுகளை வைக்க இடம் இல்லாமல் அங்கு வைத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேச எதிர்கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.