கமல்ஹாசனுக்கு பிறகு விஜய் சேதுபதி!

Filed under: சினிமா |

ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது. தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’, ‘போர் தொழில்’, ‘ஃபர்ஹானா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, கார்த்தியின் ‘ஜப்பான்’ உள்ளிட்ட படங்களுக்கு அமீரகத்தில் புரோமஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘மகாராஜா’ படத்திற்கு துபாயில் உள்ள அதிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரெயிலர் திரையிடல் மற்றும் அமீரகத்தின் சிலிகான் மாலில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஆகியவற்றையும் பலரும் பாராட்டும் வகையில் மெர்லின் தலைமையிலான கீ.மி.ஜி ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்தது. உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ டிரெயிலர் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட நிகழ்வுகள் புர்ஜ் கலீபாவில் அரிதாகவே நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முன்னோட்டம் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘மகாராஜா’ பெறுகிறது. இதற்கு முன் ‘விக்ரம்‘ படத்தின் முன்னோட்டம் இங்கு வெளியானது. இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி “ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது” என வேடிக்கையாக குறிப்பிட்டார்.