உதயநிதி “கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலகத்தை திறந்து வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. தொடக்கக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்த காலத்தில் மதிய உணவு மூலம் ஏழை-எளிய பிள்ளைகளை பள்ளி நோக்கி வரச்செய்த காமராஜர் பிறந்த ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழறிஞர் அறிவித்தார்கள். கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள். கல்வி கடைக்கோடி வரை சென்றுசேர உழைத்த காமராஜரின் பணிகளை இந்நாளில் நினைவு கூர்வோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.