சச்சினிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம் காரணம் என்ன?

Filed under: விளையாட்டு |

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பார்ட்டன். விளையாட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினின் புகைப்படங்களை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்த அவரிடம் அனுமதி வாங்கியது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமலேயே அவரது புகைப்படத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தது. இது சம்மந்தமாக சச்சின் தரப்பில் இருந்து நினைவூட்டல் அளித்த பின்னரும் தொடர்ந்து பயன்படுத்த சச்சின் ஆஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் தனக்கு இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து ஸ்பார்ட்டன் நிறுவனத்தின் இயக்குனர்’ஒப்பந்தங்களின் படி செயல்பட முடியாமல் போனதற்கு எங்கள் நிறுவனம் உண்மையில் வருந்துகிறது. சச்சின் டெண்டுல்கர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்து சமாதானமாகப் போவதாக அறிவித்தார். இதையடுத்து சச்சின் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

©நெற்றிக்கண்