சின்னம்மா புதிய உறுதி!

Filed under: அரசியல் |

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா பேட்டியளித்துள்ளார்.

அதிமுக கட்சியில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை பிரச்னையில் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.இந்த போட்டியின் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர். வரும் காலத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன்” என்று அதிமுக குறித்து கருத்து கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சசிகலா அளித்த பேட்டியில், “40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன். பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம். அதிமுக தனிப்பட நபருக்கான கட்சி அல்ல, அது ஏழைக்கான கட்சி. அதிமுக தொண்டர்கள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர். பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்” என குறிப்பிட்டார்.