தேமுதிகவிற்கு பெருகும் ஆதரவு! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டது. பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. உடல்நல குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதை பார்த்து அரசியல் கட்சிகள் வியப்படைந்தனர். தற்போதும் அவரது நினைவிடத்தில் மக்கள் சாரை சாரையாக வந்து நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திரைத்துறை மட்டுமின்றி, மக்களுக்காக விஜயகாந்த் செய்த உதவிகள் பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபலங்களும் பேசி வருகிறார்கள். இதனால் மறைந்த விஜயகாந்த் மீதான மதிப்பும், செல்வாக்கும் மக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது, வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேமுதிகவை மக்கள் ஆதரிப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. கட்சிக்கு உயிர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் விஜயகாந்த் என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள். இதனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பாஜக மும்முரம் காட்டி வருகிறது. மறைந்த விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் பாஜகவின் தேர்தல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதையடுத்து அதிமுகவும், தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார். தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, பாஜகவை போல் அதிமுகவும் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. வரும் காலங்களில் கட்சியின் வளர்ச்சி கருதி, தொண்டர்களின் நலன் கருதி பிரேமலதா சரியான முடிவு எடுத்தால், தேமுதிக மீண்டெழும் என்பதே அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது. திமுகவை பொருத்தவரை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 11 இடங்கள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பு இந்த முறை 15 சீட்டுகளை வாங்கி விட வேண்டும் என உறுதியாக உள்ளது. அத்தனை சீட்டுகள், காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமா என்பது சந்தேகம் தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.