புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 – முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம் !

Filed under: தமிழகம் |

 விருத்தாச்சலம்,மே 19

புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம்.

திமுக தலைமையின் ஒன்றிணைவோம் வா என்ற ஆப் மூலம்,  விருத்தாச்சலம் முல்லை நகரை சேர்ந்த ஒரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன்,  மருந்து செலவுக்கு எனக்கு உதவுங்கள் என்று தொலைபேசியில் திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம்  கூறியுள்ளார்.

உடனே திமுக தலைமை விருத்தாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனிடம் அந்தப் பெண்ணுக்கு உதவ சொல்லியுள்ளது. அதன்படி குழந்தை தமிழரசன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்று, ரூபாய் 100 தந்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் கொடுத்த ரூபாயை பெற்றுக் கொண்ட அந்தப் பெண் மீண்டும் திமுக தலைவரிடம் குழந்தை தமிழரசன் வெறும் 100 ரூபாய் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட திமுக தலைமை, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏவுக்கு போன் மூலம் நீங்கள் உடனடியாக முல்லை நகர் புற்றுநோய் பெண்மணிக்கு மருந்து செலவுக்கு பணம் கொடுங்கள் என்றும், குழந்தை தமிழரசன் கட்சி மானத்தை வாங்கி விட்டார் என்றும் கூறியுள்ளது. 

அடுத்த நிமிடமே கணேசன் எம்.எல்.ஏ அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று மருந்து செலவுக்கு தேவையான பணத்தை நிறைவாக கொடுத்து திமுகவுக்கு நல்ல பெயர் எடுத்து தந்துள்ளார். மேலும் விருத்தாசலத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு பொருட்கள் வழங்குவதாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன்,  இசைக்கலைஞர்களை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சுமார் 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் சுமார் ஒரு மணிநேரம் வியர்வை சொட்ட சொட்ட வாசித்து உள்ளனர். 

அவர்களின் வாசிப்பை நன்றாக ரசித்து விட்டு, ஒவ்வொருவருக்கும் வெறும் சொற்ப ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொடுத்துள்ளார்.  அந்த பொருட்களை பார்த்ததும் இசைக்கலைஞர்கள் முகம் சுளித்தனர். நாங்கள் எங்கள் இசைக்கருவிகளை பேருந்து வசதி இல்லாத ஊர்களில் இருந்து சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வந்து,  அவரது வீட்டின் முன்பு வாசித்துக் காட்டிய எங்களுக்கு இவர் கொடுத்த உதவிப் பொருட்களை பார்த்ததும், எங்களுக்கு மனசே சரியில்லை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் வீட்டுக்கு முன்பு இலவசமாக வாசித்த நேரத்தில், விசேஷ வீடுகளில் வாசித்திருந்தால் 1000 முதல் 2000 வரை சம்பாதித்து இருப்போம் என்றும்,  அவர் இலவசமாக எங்களுக்கு பொருட்கள் தந்தார் என்பதை விட,  நாங்கள் தான் அவரை வீட்டுக்கு முன் இலவசமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளோம் என்பது தான் உண்மை என்று இசைக்கலைஞர்கள் ஒருவர் நம்மிடம் வேதனையாக கூறினார். அருகில் இருந்த இன்னொரு திமுக தொண்டர் புற்றுநோய் பெண்மணிக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, விளம்பரம் செலவுக்கு 5000 செலவு செய்த அறிவுஜீவி இவராகத்தான் இருக்கக்கூடும் என்றும், சிலரைப் போல் மேனாமினுக்கி அரசியல் செய்வதை நிறுத்திக் கொண்டால் திமுக கட்சி வளர்ச்சி அடையும் என்று கூறினார்.