போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம்!

சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக வரும் ஜூன் 9ம் தேதி நாடு முழுதும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்திருந்தார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்ததாகவும், கிழக்கு ரயில்வே பணியில் சேரவுள்ளதாகவும் என வெளியான தகவலுக்கு சாக்ஷி மாலிக் மறுப்பு தெரிவித்ததோடு, “போராட்டத்தைக் கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். எனவே, மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.