மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இச்செயலை கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு 9 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனையை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது; இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.