ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கையனூர் என்ற இடத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2021/02/images-32-3.jpeg)
பின்னர் பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் அதற்கான ரசீது விவசாயிகளிடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு என்ன செய்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், என்னென்ன திட்டங்களை செய்திருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டவே ஊடகங்களில் விளம்பரம் செய்வதாக விளக்கம் அளித்தார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை வாங்கும் ஸ்டாலினால், அதை நிறைவேற்ற முடியாது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தி 5 லட்சத்து 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் சோளிங்கர் அருகே பாண்டியன்நல்லூர் பகுதியில் பிரசாரம் செய்த அவர், தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாகவும், தமிழக அரசின் செயல்பாட்டால் ஸ்டாலின் எரிச்சல் அடைவதாகவும் கூறினார்.
தொடர்ந்து ராணிபேட்டையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், ஹஜ் புனிதபயணம் மேற்கொள்வோர் தங்கும் வகையில் சென்னையில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை திமுக அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும், மு.க.ஸ்டாலின் சிறு வயது முதலே கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் கடுமையாக சாடினார்.