வேலுமணியின் பேச்சால் சர்ச்சை!

Filed under: அரசியல்,தமிழகம் |

எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2ம் தேதி கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கவுள்ளார். தமிழகம் முழுதும் திமுக அரசு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. விளம்பரத்தில் மட்டுமே ஆட்சி ஓடுகிறது. கோவையிலுள்ள அனைத்து தொகுதியிலும் ஒரு பணியும் செய்யவில்லை. எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. இதனை கண்டு கொள்ளாத அரசாக உள்ளது. மக்களின் பொதுவான போராட்டத்திற்கு அதிமுக தவிர வேறு எந்த கட்சியுமில்லை.

எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை. திமுகவை எதிர்த்து ஒவ்வொரு ஊரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பின்னால் உள்ளது. அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. தைரியமிருந்தால் ஆட்சியை கலைத்து தேர்தல் வையுங்கள். இப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வருவார். அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி, காய்ச்சல்க்கு மருந்து இல்லை. அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அதிமுக மட்டுமே மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி. நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்“ என பேசியுள்ளார்.