ஆப்பிரிக்க நாட்டில் சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி

Filed under: உலகம் |

இன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலால் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவில் பிரெடி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. வெப்பமண்டல புயலான இது, கடந்த பிப்ரவரி 21ம் தேதி மடகாஸ்டர் வழியாக, இந்திய பெருங்கடலில் பரவி, பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கில் கரைகடந்தது. இப்புயல், மொசாம்பிக்கில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதில், கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சிறு நாடான மாலாவியும் பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. புயல் கரையைக் கடந்தபோது, பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டது, அத்துடன் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. நேற்றுவரை 196 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இன்று பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து, மலாவி நாட்டு இயற்கை வங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம், பிரெடி சூறாவளி புயல் தாக்கத்தால் பல மாவட்டங்கள் மேலும் பாதிக்கப்படும். பெருவெள்ளம் ஏற்படும், அதேபோல், காற்றின் வேகம் இருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்பு பணிகள் நடந்துவரும் நிலையில், தெளிவற்ற வானிலையாலும், மின்சார துண்டிப்பாலும், சாலையிலுள்ள வெள்ளம், பாலங்கள் இடிந்துள்ளதாகவும் மீட்புப்படையினர் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.