இசைஞானிக்கு சதாபிஷேகம்!

Filed under: சினிமா,தமிழகம் |

இசைஞானிக்கு இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பாடப்பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களைச் செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு நேற்று மாலை 80 வயதடைந்த இசையமைப்பாளர் இளையராஜா வருகை தந்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.