ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலை யாருக்கு?

Filed under: அரசியல்,தமிழகம் |

இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி வரலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக கட்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே தலைமை குறித்த போட்டி எழுந்துள்ளது அனைவரும் தெரிந்த விஷயமே. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் இந்த முடிவு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கட்சி ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்கட்சி துணை தலைவராகவும் தொடர்ந்து வருகிறார். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமகா கட்சிக்குத்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இடைத்தேர்தலில் இந்த தொகுதியை அதிமுகவிற்கே தமகா விட்டுக்கொடுத்துள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் விட்டுக் கொடுத்து போவார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. இருவரும் தங்கள் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினால் இருவரையும் ஒரே கட்சி என கருத முடியாது. ஒன்று ஒருவரை சுயேட்சையாக அறிவிக்க வேண்டியிருக்கும். அல்லது இருவருமே தனித்தனி சின்னத்தில் போட்டியிட வேண்டி வரும் இரட்டை இலை கிடைக்காது. எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சேர்ந்து பேசி சுமூகமாக ஒரு வேட்பாளரை கட்சி வேட்பாளர்களாக அறிவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், இரட்டை இலையை பெறுவதில் இருவருமே மும்முரம் காட்டக் கூடும் என்றும், இதுதொடர்பாக டில்லியின் ஆதரவை பெற இருவருமே முயற்சிக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகிறது.