நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா!

Filed under: அரசியல் |

நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தினம் தினம் திரைப்பட க்ளைமேக்ஸ் காட்சிகளை விட விறுவிறுப்பாக தேர்தல் காட்சிகள் மாறி வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுபறியாக இருந்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்து, இன்று காலை சுமூகமாக கையெழுத்தானது.

அதிமுக கூட்டணியில் இன்னும் தேமுதிக ஒரு முடிவுக்கு வராத நிலையில், நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக அதிமுக ஆகிய இரு அணிகளிலும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஓரிரு தினங்களில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை, நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்துகிறார்.

இந்நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. ஜான் பாண்டியன் கட்சி , மூவேந்தர் முன்னேற்ற கழகம் , நடிகர் கார்த்திக்கின் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணி சார்பில், நடிகர் கார்த்திக் இரட்டை இலை சின்னத்தில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக்கை பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.