எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

பிரதமர் மோடி தேர்தல்களில் தோல்வியடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது எனவும் விமர்சித்தார்.

பிரதமர் மோடி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதில் உரையில், “எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து நாட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது என்றும் இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என்றும் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம். அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது என தெரிவித்த பிரதமர், சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது, இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே தங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது. 2047-ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற தாங்கள் தயாராக உள்ளது. அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். தேர்தல்களில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளது, காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது. 99 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கு 99 இடங்களில் வென்றது போல் பேசி வருகிறது. 543-க்கு- 99 இடங்களில் தான் காங்கிரஸ் வென்றது. தமிழகத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என்று பேசினார். முன்னதாக பிரதமர் மோடி பதிலுரையை துவங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் போட்டபடியே இருந்தனர். மணிப்பூர், மணிப்பூர் எனவும், நீதி வேண்டும் எனவும், கோஷம் போட்டதுடன் மேஜையை தட்டினர். மணிப்பூர் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என இடையூறு ஏற்படுத்தினர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பிக்கள் அனைவரும் அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சியினரின் அமளி மிகவும் தவறான செயல் என சபாநாயகர் கண்டித்தார்.