ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

Filed under: தமிழகம் |

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற துணைவேந்தர் தனது மகளுக்காக 100 பவுன் நகைகள் சேர்த்து வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சின்னமணி தெருவை சேர்ந்த சுகுமார் மீன்வளக்கல்லூரியில் துணைவேந்தராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற நேரம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுகுமார் சென்னையிலிருந்து திரும்பி வந்த பின் தனது வீட்டில் 100 பவுன் நகை திருடு போனது அறிந்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார் தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் 100 பவுன் நகைகளை சேர்த்து வைத்திருந்தார். அந்த நகைகள் தற்போது கொள்ளை போனதால் தனது மகளின் திருமணம் என்ன ஆகுமோ என்ற அதிர்ச்சியில் உள்ளார்.