கடுமையான அனல் காற்று வீசும்

Filed under: தமிழகம் |

கடுமையான அனல் காற்று வரும் ஐந்து நாட்களுக்கு வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி தமிழகத்தில் நேற்று எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

மே மாதம் நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்.
இதனால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது வெயிலின் தாக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும்.