காதலித்த பெண்ணையே கத்தியால் குத்திய காதலன்!

Filed under: தமிழகம் |

காதலித்த பெண்ணையே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் அருகிலுள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த 20வயதான சதீஷ்குமாரும், அதே பகுதியை சேர்ந்த 18வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இன்று திருவலம் பேருந்து நிலையத்தில் மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சதீஷ்குமார் தப்பி ஓட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியை அருகிலுள்ள மருத்துவனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார், “நானும் அந்த பெண்ணும் பல நாட்களாக காதலித்து வந்தோம், ஆனால் சமீப காலமாக அந்த பெண் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டு வேறு ஒரு நபருடன் அடிக்கடி பேசி வந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரமடைந்து கத்தியால் குத்தினேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.