கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

Filed under: அரசியல்,தமிழகம் |

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் நான்கு கட்சிகளுமே மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரமும் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். மானாமதுரையில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் செய்ய சென்றபோது அவரை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிரச்சாரம் செய்ய அனுமதி பெறவில்லை என்றும், ஆட்டோவுக்கு மட்டும் அனுமதி வாங்கிய கடிதத்தை கட்சி நிர்வாகிகள் காண்பித்த நிலையில் அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால் அவரை தடுத்து நிறுத்தினார்கள் என்றும் தெரிகிறது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.