குலசை தசரா திருவிழா; ஏற்பாடுகள் தீவிரம்!

Filed under: தமிழகம் |

இன்று முதல் குலசேகரன்பட்டிணத்தில் தசரா திருவிழா தொடங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தசரா திருவிழா கொண்டாடப்படவில்லை. இவ்வாண்டு இம்மாதம் தசரா திருவிழா விமர்சையாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இன்று தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் முதல் இரவு வரை சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். விழா நாட்கள் முழுவதும் தினமும் இரவு அம்மன் அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெறும் விழாவில் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 10ம் திருநாள் (அக் 5) இரவு 12 மணிக்கு நடைபெறும். குலசை திருவிழாவிற்கு வெளி மாவட்ட மக்களும் அதிக அளவில் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.