அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதுமாக மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அவ்வகையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை நக்கீரன் தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை இன்று நேரில் ஆய்வு செய்தோம். முகாமிற்கு வருகை தந்த பொது மக்களிடம் அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்தோம். அனைத்து வகையிலும் கழக அரசு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் செயலாற்றிடுமென உறுதியளித்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.