தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார்.

செய்தியாளர்களிடம் திருச்சி சூர்யா, “விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் சென்று அவர்களை சந்தித்து வருகிறோம். மத்திய அமைச்சரவையில் தமிழர்கள் இடம்பெறாதது போன்ற வருத்தங்கள் உள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் மூன்று பேர் மத்திய அமைச்சராக உள்ளனர், மூன்று பேர் ஆளுநர்களாக உள்ளனர். மக்கள் பாஜக பிரதிநிதியை நேரடியாக தேர்ந்தெடுத்த அனுப்பினால் நிச்சயம் மாநில தலைவர் பிரதமரிடம் கேட்டு அமைச்சரவையில் இடம் பெற்று தருவார்” என்று கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகிகள் மீது குற்ற பின்னணி உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளது குறித்து கேள்விக்கு:
“நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் என்மீது பாசமானவர். ஆனால், கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது, அவருக்கு கோபம் வந்தது ஆனால், அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால், நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால், சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன். 2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026 இல் முதல்வராவார்” என கூறினார்.