நடிகர் அஜீத்தின் தந்தை மறைவு!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜீத் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அஜீத்தின் வீட்டுக்குள் விஜய்யின் கார் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜீத் அறிக்கை ன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “எங்களது தந்தையார்‌ திரு.பி.எஸ்‌.மணி அவர்கள்‌ பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில்‌ இருந்து வந்தார்‌. இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில்‌ உயிர்‌ நீத்தார்‌. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால்‌ பாதிக்கப்பட்டிருந்த எங்கள்‌ தந்தையை அன்போடும்‌, அக்கரையோடும்‌ கவனித்து வந்தும்‌, எங்கள்‌ குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும்‌ நாங்கள்‌ கடமைப்பட்டுள்ளோம்‌. எங்கள்‌ தந்தையார்‌ சுமார்‌ அறுபது ஆண்டு காலமாக எங்கள்‌ தாயின்‌ அன்போடும்‌, அற்பணிப்போடும்‌ ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்‌. இந்த துயர நேரத்தில்‌, பலர்‌ எங்கள்‌ தந்தையாரின்‌ இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும்‌, எங்கள்‌ குடும்பத்துனருக்கு ஆறுதல்‌ சொல்வதற்காகவும்‌ எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல்‌ அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்‌. தற்போதுள்ள சூழலில்‌ எங்களால்‌ உங்கள்‌ அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில்‌ தகவல்‌ அனுப்ப இயலாதமையை நீங்கள்‌ புரிந்துகொள்வீர்கள்‌ என நம்புகிறோம்‌.
எங்கள்‌ தந்தையாரின்‌ இறுதி சடங்குகள்‌ ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்‌. எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும்‌, இழப்பையும்‌ புரிந்துகொண்டு, குடும்பத்தினர்‌ துக்கத்தை அனுசரிக்கவும்‌, இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில்‌ செய்யவும்‌ ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்‌.” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்மூலம் தனது தந்தை இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக மட்டுமே நடத்த உள்ளதாகவும், இதை பிரபலப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் மறைமுகமாய் வேண்டிக் கொள்வதாய் தெரிகிறது. அஜீத்குமார் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் கொண்டு செல்லக்கூடாது என்பதில் கவனமாகவே கடந்த பல காலமாக செயல்பட்டு வந்துள்ளார்.