பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ள அடுத்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கிறார்கள். ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கவிருக்கிறார்.

வரும் மே மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை ததும்பும் இந்த வீடியோ, வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. படத்தை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி “லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதனையும், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஷ்வத் மாரிமுத்துவையும் இணைப்பதில் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மகிழ்ச்சியடைகிறது. இந்த புதிய திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் கட்டாயம் பெற்று ஏஜிஏஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடிக்கும்” என்றார். இத்திரைப்படத்தின் தலைப்பு, இதில் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.