புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை!

Filed under: அரசியல்,சென்னை |

அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார்.

புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கம் அடையும். சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பு இன்றியமையாதது. வர்த்தகம் சுற்றுலா தொழில்கள் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய விமான நிலையம் அவசியம் தேவை. இப்பகுதியை மேம்படுத்த உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும். புதிய விமான நிலையத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும். பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்தால் நீர்நிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நிலம் வழங்குபவர்களுக்கு கூடுதல் மற்றும் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.