பேருந்து நடத்துனர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

அரசுப் பேருந்தின் நடத்துனர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

இன்று பிற்பகல் குமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் நாகர்கோவில் அருமனையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பவர் நடத்துனராகவும் பேச்சிப்பறையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்பவர் டிரைவராகவும் பணியில் இருந்துள்ளனர். பேருந்து வள்ளியூரை கடந்து வாகைகுளம் அருகே வரும் பொழுது நடத்துனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கிய அவர் சரிந்து விழுந்தார். இதை கண்டு அதிர்ந்த பயணிகள் டிரைவருடன் சேர்து உடனடியாக அதே பஸ்சில் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். உரிய பணியாளர்கள் இல்லாததால் அதிக பணிச்சுமையுடன் தொடர்ந்து அவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சக பணியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.