சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்!

Filed under: தமிழகம் |

சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி முதல்வரின் இரங்கல் செய்தியில்; பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி தலைவர் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (8.10.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்தவர். இவர் அரசியல் மட்டுமின்றி, சமூக நீதிக்காவும் அயராது உழைத்தவர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 8 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும் அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். இவர் தொழில் தொழில்துறை, வேதிப்பொருள் மற்றும் உரத்துறை, தகவல் தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்.

அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.