முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இவ்வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணிஷ் சிசோடியா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 6-ம் தேதி நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்குகளில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்கும் போது, “அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறோம். உத்தரவாதத் தொகையாக ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும். அவர் தனது பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது. நிபந்தனைகளின் அடிப்படையில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தனர். இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.