மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினர் நேற்று தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.