மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின் போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே ‘சமூகநீதி’ எனும் தேர்தல் அறிக்கை. பிரதமர் நரேந்திரமோடி வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுக-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது. சமூகநீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.