முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக புதிய எம்பி-க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி-க்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்கு எம்பி-க்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக எம்பி-க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், மக்களவையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என தெரிகிறது.