மேகதாதுவில் அணை குறித்து மத்திய அரசு விளக்கம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அனுமதி கேட்டு மத்திய அரசிடம், கர்நாடகா விண்ணப்பித்து உள்ளது. அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையையும் அளித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 2 கடிதங்களை ஜல்சக்தி துறைக்கு அனுப்பியிருந்தது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மேகதாது தொடர்பாக கர்நாடகா அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம் அளித்த பதிலில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், அணை கட்ட அனுமதிக்கும்படி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார்.