சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்”.
படம் உலகம் முழுதும் இன்று ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “மது அருந்தினால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. இதனால் குடும்பமும் பாதிக்கும். நான் மது அருந்தியதால் நிறைய இழந்திருக்கிறேன். அனுபவத்தில் கூறுகிறேன் மது அருந்தாதீர்கள். இக்குடிப்பழக்கம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதைவிட எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்’’ என்று கூறியிருந்தார். ரஜினியின் பேச்சு தமிழகத்தில் பேசு பொருளானது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் “இனிமேல் குடிக்க மாட்டோம்” என்று உறுதியெடுத்தனர். இனி மது அருந்த வேண்டாம் என ரஜினிகாந்த் சமீபத்தில் உருக்கமாக கேட்டுக் கொண்ட நிலையில், மதுரை மாவட்டம் ஜெயம் தியேட்டரில் ‘ஜெயிலர்’ படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள் “இனி மது அருந்த மாட்டோம். இவ்வளவு நாள் தெரியவில்லை. எங்கள் தலைவர் சொன்ன பிறகுதான் புரிகிறது” என்று தெரிவித்துள்ளனர்.