ராஜபக்சேவின் புலம்பல்!

Filed under: அரசியல் |

தாய்லாந்தில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம் பெரிய அளவில் இலங்கையில் நடந்ததையடுத்து இலங்கையிலிருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்த அவர் தற்போது தாய்லாந்துக்கு தஞ்சம் புகுந்துள்ளார். தாய்லாந்து அரசு கோத்தபாய ராஜபக்சவை தற்காலிகமாக தங்க அனுமதித்துள்ளது என்றும், அதிகபட்சமாக 90 நாட்கள் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 90 நாட்களுக்குள் வேறு நாட்டிற்கு அவர் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு நாட்டை தேடுவதில் அவரது தரப்பினர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக கோத்தபய ராஜபக்சே சுவிட்சர்லாந்து செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும் படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாகவும் நாடு திரும்ப முடியாததால் விரக்தியிலும் புலம்பி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.