வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை உறுப்பினர் ஆக்குவது மக்களின் மத உரிமை மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர் இடம்பெற முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா? குருவாயூர் தேவசம்போர்டு நிர்வாகத்தில் இந்து அல்லாத ஒருவருக்கு இடம்தர முடியுமா? மராட்டியம், அரியானா உள்ளிட்ட மாநில தேர்தலை மனதில் கொண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படடது. தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு நாளை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இன்றும் ஜெயின் சமூகம், பார்சிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும். நாட்டு மக்களை பிளவுபடுத்துவதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “மதசார்பற்ற நாடான இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறு. இஸ்லாமியர்களுக்கான வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தவரை எப்படி கொண்டு வர முடியும்? கூட்டாட்சி தத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது. வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது. அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. வக்பு வாரிய சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக முன்தேதியிட்டு சட்டத்தை அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.