வாரானாசியில் தவிக்கும் இந்துக்களை காப்பாற்றுங்கள் !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை,மே 4 

தமிழக முதல்வருக்கு த.மு.மு.க தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம் அனிபா விடுக்கும் வேண்டுகோள்.

குணங்குடி அனிபா

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் தமிழக அரசு கவனம் அதிகமாக செலுத்தி அவர்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள், அதை சரியான முறையில் டெல்லியில் இருக்கும் தமிழக பிரதிநிதிகளை வைத்து அவர்களை தமிழகம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் இந்தியாவில் பல மாநிலங்களில் நம் தமிழர்கள் சிக்கி இருக்கிறார்கள், அவர்களை கொண்டு வர தமிழக அரசு இன்னும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களை தமிழகம் கொண்டு வர முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும்.

இன்னும் சொல்லபோனால் உத்திரபிரதேசம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்ற தமிழர்கள் சுமார் 500 பேர்  தமிழ்நாட்டுக்கு வருவதற்காக அனுமதி பாஸ்க்காக காத்திருக்கிறார்கள், என்ற செய்தி அங்கிருந்து வந்தவண்ணம் உள்ளது. ஆகையால் அவர்களை ஆய்வு செய்து அங்கே மடங்களில்  தங்கியிருக்கிற தமிழர்களை உரிய முறையில் கொண்டு வரும் முயற்சிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

அதேபோல் இது ரமலான் மாதம், தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான உணவு தானியங்களை சில தொண்டு நிறுவனங்கள் கொடுப்பது வழக்கம், அதை சிறை நிர்வாகம் விதிகள் முறைப்படி கொடுப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு இது வரை சிறை வாசிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் கொடுக்க தயாராக இருந்தும் சிறைத்துறை நிர்வாகம் பெற்று கொடுப்பதற்கு தயாராக இல்லை. ஆகவே முதல்வர் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் நோன்பு இருக்க வழிவகை செய்து தர வேண்டும்.

சென்னை மற்றும் பிற மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள், ரமலான் நோன்பு வைப்பதற்கு அதிகாலையில் உணவு தேவை. அவர்களுக்கு உணவு அதிகாலையில் கிடைக்கும் வகையில் காலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை உணவகங்களை திறந்து வைத்து பார்சல் கொடுக்க  வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன் என அறிக்கை.