விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

Filed under: சென்னை,தமிழகம் |

கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக,  தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான்  பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகளும் களத்தில் இறங்கி பெரிய அளவில் மக்கள் சேவை செய்து வருகின்றனர். பலருக்கும் அரிசி பருப்பு உணவு என்று வீடு தேடி சென்று கொடுத்து வருகின்றனர்.

தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் இப்படி செய்து கொண்டிருக்க, தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரிலோ மத்திய சென்னையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மகளிரணி நிர்வாகி ஒருவர் தன் குடும்பத்தோடு நாற்பது நாட்கள் உதவ ஆள் இல்லாமல்,  தவித்து பின் தூத்துக்குடி நிர்வாகி மூலமாக சென்னை வந்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது. ஒட்டு மொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி தலைவியாக இருப்பவர் தேவி. இவர் தீவிர விஜய் ரசிகை இவர் இருக்கும் பகுதியில் நிறைய பொது சேவையும் மக்களுக்கு அன்னதானங்களும் செய்துள்ளார். இவர்  கடந்த 23.04.2020  அன்று சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, தனது மகள் ரம்யா மருமகன் மாமியார் மற்றும் உறவினர்கள் உட்பட 11 பேருடன் மகள் ரம்யா திருமணம் முடிந்த கையோடு  புதுமண தம்பதியுடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றார்கள்.

சுவாமி தரிசனம் முடிந்த அன்று தான் திடிரென ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், சென்னை செல்ல முடியவில்லை. இவர்கள் வந்த வேணும் திருச்சி வந்துவிட்டது. பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. தேவியுடன் வந்த உறவினர் 11 பேரும், கடந்த 40 நாட்களாக திருச்செந்தூரில் மிகவும்  கஷ்டப்பட்டுள்ளனர். திருச்செந்தூரில் அவர்கள் இருந்த ஒவ்வொரு நாளும் மிகுந்த துயரத்துடனே சென்றுள்ளது. பதினொரு பேரும் பேருந்து நிலையத்திலேயே  சிலர் கொடுத்த உணவைத்தான் பிச்சைகாரர்க்ளுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இவர்கள் நிலைமையை கண்ட ஒரு அரசு அதிகாரி மட்டும் இவர்களை கோவில் மண்டபத்தில் தங்க வைத்து அங்கு உள்ள உணவை கொடுத்துள்ளார். அங்கும் இவர்களால் இருக்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த உணவை தொடர்ந்து சாப்பிட முடியவில்லை. தங்களுடைய நிலைமையை மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமாருக்கு போன் பண்ணி தலைமையுடன் சொல்லி உதவ சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் ஒரு பத்தாயிரம் பணம் உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார் தேவி.

உதவுவதாக சொன்னவர் கடைசியில் பூக்கடை குமார் கை விரித்து விட்டார். மாநில செயலாளர் புஸி ஆனந்த் என்பவரும் ஐந்து பேர் மட்டுமே வருவதற்கு ஏற்பாடு செய்யமுடியும் அதற்கு மேல் முடியாது என்று சொல்லிவிட்டார். ஐந்து பேர் போய் என்ன செய்வது. ஏற்கனவே தெருவில் நிற்கிறோம் மிச்சம் பேரை சாகவா அடிக்க முடியும். பிறகு ஏற்பாடு செய்து விட்டு பேசுகிறேன் என்று சொன்ன புஸி ஆனந்த் அதற்கு பிறகு பேசவேயில்லை.

அடுத்து தேவியே நம்மிடம் பேச ஆரம்பித்தார். சார் ‘’இதனால் நாங்கள் மணம் நொந்து போனோம். எங்களின் பரிதாப நிலையை பார்த்து காய்கறி வியாபாரி ஒருவர் மட்டும் லாரி தருகிறேன் அனுமதி வாங்கி கொண்டு வேண்டுமென்றால் போங்கள் என்று சொன்னார். நாங்களும் அனுமதிக்காக திருச்செந்தூர் ஆர்.டி.ஒ வை தனப்பிரியாவை அணுகினோம் எங்களை மனுசியாக கூட அந்தம்மா மதிக்கவேயில்லை. நாங்களும் அழுகாத குறைதயாக சொல்லி பார்த்தோம் ஈவு இரக்கம் இல்லாத அந்தம்மா எங்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.

எங்களுக்கு வாழ்க்கையை வெறுத்து விட்டது ஒரு கட்டத்தில் நடந்தே போய்விடலாமா என்று கூட யோசித்தோம். சின்னக் குழந்தைகள் கூட இருப்பதால் அந்த முயற்சியை கைவிட்டோம். கலெக்டர் காலில் விழுந்தாவது கேட்போம் என்று முயற்சி எடுத்தோம். அவர் தூத்துக்குடியில் இருப்பதால் அந்த முயற்சியும் எங்களுக்கு கை கழுவி போனது. எணக்கு அழுகையும் ஆத்திரமாக வந்தது. எவ்வளவோ பேருக்கு உதவி செய்த நமக்கு உதவ ஆள் இல்லையே முருகன் இப்படி சோதிக்கிறானே என்று கண்ணீருடன் எங்கள் மன்ற அடுத்த கட்ட நிர்வாகிகள் பலருக்கும் போன் அடித்தேன்.

  சென்னை மாவட்ட நிர்வாகி சிவப்பிரகாசம் என்பவருக்கும் போன் அடித்தேன் அவர் தான் திருச்சி மாவட்ட தலைவர் ராஜா அவர்களை தொடர்பு கொண்டு விவரம் சொல்ல… அவர் உடனே தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகனிடம் நிலைமையை விளக்கி சொல்லியிருக்கிறார். தங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் பட்ட துன்பத்தைக் கண்ட பில்லா ஜெகன் உடனடியாக எங்களை நேரில் சந்தித்து விட்டு, எங்களுக்கு உணவு உடை தங்க இடம் என்று அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். பின்னர் தூத்துக்குடி ஆட்சியரை தொடர்பு கொண்டு புதுமன தம்பதிகளுடன் நாங்கள் படும் பாட்டை சொல்லியிருக்கிறார். அவரும் தன் கவனத்திற்கு இந்த விசயம் வரவில்லை என்று அதிர்ச்சியடைந்து, உடனடியாக எங்கள்  பதினொரு பேருக்கும் சிறப்பு அனுமதி பாஸ் வழங்க உத்தரவிட்டார். அனுமதி வாங்கிய கையோடு, பில்லா ஜெகன் அவர்கள் எங்களுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்ததுடன் அதற்கான செலவை ஏற்று எங்களுக்கு பண உதவி செய்து, திருமண தம்பதிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். நாங்கள் அப்பொழுது தான் முருகன் வடிவில் பில்லா ஜெகன் சாருக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்லிவிட்டு சென்னை வந்தடைந்தோம்.

சென்னை வந்தடைந்த பிறகு மறு நாள் வில்லிவாக்கத்தை சேர்ந்த விஜய் மன்ற நிர்வாகிகள் சிலர் வந்து அரிசி பருப்பு காய்கறிகள் என்று கொடுத்து விட்டு, மறுநாள் கேரளா மீடியாவில் எங்களை காப்பாற்றியது மாநில நிர்வாகிகள் என்று தவறான தகவல்களை பரப்பி விட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள சில டிவி சேனல்களிலும் என் பெயரை தேவிகா என்று தவறாக சொல்லி எங்களை புஸி ஆனந்த் தான் விஜய் சாரிடம் சொல்லி அவர் அனுமதி பெற்ற பிறகுதான் தூத்துக்குடி திருநெல்வேலி மன்ற நிர்வாகிகள் மூலம் தான் நாங்கள் அழைத்து வரப்பட்டு பத்திரமாக சென்னை திரும்பினோம் என்று சொல்லி ‘’ஒரே ஒரு போன் காலில் 40 நாட்களாக தவித்த 11 பெண்களை நடிகர் விஜய் காப்பாற்றினார்’’ என்று தவறான தகவல்களை பரப்பி விட்டிருக்கிறார்கள். சத்தியமாக இந்த விசயம் நடிகர் விஜய் சாருக்கு தெரிய வாய்ப்பில்லை மேல் மட்ட மன்ற நிர்வாகிகள் தான் அவர் பெயரை கெடுக்கின்றனர். இவர்களால் தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் இழுக்கு ஏற்படுகிறது.  

ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் எங்களை மேல்மட்ட நிர்வாகிகள் யாரும் காப்பாற்றவில்லை. காப்பாற்றியது பில்லா ஜெகன் சாரே தவிர வேறு யாரும் இல்லை. மேல்மட்ட நிர்வாகிகள் முயற்சியில் தான் நாங்கள் காப்பற்றபட்டது போல் தவறான தகவல்களை பரப்பி என்னையும் தவறாக சித்தரிக்கிறார்கள். குடும்ப தகராறில் போய்விட்டார் என்றெல்லாம் பொய்யான தகவல்களை பரப்பினார்கள். என் பதவியை எடுத்தாலும் பரவாயில்லை இந்த உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும் அது தான் எங்களை பில்லா ஜெகன் சார் காப்பாற்றியதற்கு நாங்கள் அவருக்கு தரும் மரியாதை. இனி விஜய் ரசிகையாகவே இருந்து நான் என் கடமையை செய்வேன் என்று முடித்துக் கொண்டார்.