4 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 25:
“திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுக சார்பில், 500க்கும் அதிகமான வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களிடமும், தாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அவர்களிடம், ‘தேர்தலின் போது அளித்த 500 வாக்குறுதிகளும் அரசாணையாக மாற்றப்பட வேண்டியது அவசியம். வாக்குறுதிகளை நிறைவேற்ற சம்மந்தபட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதிகளை இந்த 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 505 வாக்குறுதிகளில், இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என கூறினார்.