சென்னையில் ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்

Filed under: சென்னை |

மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று பணி நடந்து கொண்டிருக்கும் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்துள்ளது.

சென்னை போரூரில் அஞ்சுகம் நகரிலுள்ள பார்த்தியநாதன் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மோதியதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனால் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். ஆனால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் சேதமாகின. முதலில் பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற குடியிருப்பு வாசிகளும் வீட்டிலிருந்து வெளியேறினர். அதன்பிறகுதான் உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.