வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஜய் சேதுபதி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் அவர் “ஒவ்வொரு தேர்தல் வரும் போது நம்முடைய ஒரு ஓட்டு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று பலர் மெத்தனமாக இருந்து விடுகிறார்கள். அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய எதிர்கால தலைமுறையினர்களுக்காக ஓட்டு போட வேண்டும். ஓட்டு போட காசு வாங்குவது எவ்வளவு பெரிய துரோகமோ, அதைவிட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. நமக்கு யார் நன்மை செய்வார்கள், நம் நாட்டில் உள்ளவர்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து ஓட்டு போட வேண்டும். இதுவரை அரசியல் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை இன்று முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அரசியல் பேசுங்கள். அரசியல் குறித்த விவாதம் செய்து அலசி ஆராய்ந்து உங்களுக்கு யார் நல்லவர் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள், ஆனால் ஓட்டு போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்” என்று விஜய் சேதுபதி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.