திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் பொன்விழா. அமைச்சர்கள் வாழ்த்து.

Filed under: தமிழகம் |

திருச்சி பெரியார் மணியம்மை
பள்ளியில் பொன்விழா. அமைச்சர்கள் வாழ்த்து.

திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டு பொன்விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தி க. தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார். தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, சிறந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இருந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்விச்சேவை ஆற்றி வருவது தி. க. மட்டும்தான். சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பின்தங்கிய மாணவ, மாணவியரும் இணையான கல்வி பெறும் வகையில் பெரியார் கல்லூரியை தொடங்கினார். பின்னர் அவரது வழி வந்த ஆசிரியர் கி. வீரமணி கல்லூரி மட்டுமின்றி பள்ளிகள் முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தி கல்விச்சேவை ஆற்றி வருகிறார். இந்த கல்வி நிறுவனம் நூற்றாண்டு விழாவும் காணும் வகையில் வளர வாழ்த்துகள் என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், பெரியாரின் கொள்கையின்படி பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் ஏராளமான பெண்களின் கல்விக்கு அடித்தளமிட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார், இத்திட்டத்துக்கு வித்திட்டவர் பெரியார்.. மாணவப் பருவத்தில் கல்வி மட்டுமே பிரதானமாக கொளள வேண்டும். அதே நேரம் உலக அறிவும் அவசியம் என்றார்.

தி க தலைவர் கி. வீரமணி பேசுகையில், பெரியார் கூறியதுபோல அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கிணங்க, சாமானியர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற வகையில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட கல்வி நிறுவனம் என்பதால் பாகுபாடு நிலவுகிறதா என பலரும் சந்தேகத்துடன் இருந்த காலமும் உண்டு. ஆனால் அவற்றை பொய்யாக்கி இங்கு அனைவருக்கும் தரமான கல்வி போதிக்கப்படுகிறது. எனவேதான் இங்கே பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முதல் இந்நாள் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சிறந்த மாணவியர் என அனவரும் பாராட்டப்பெற்றுள்ளனர். நமது கல்வி அமைச்சர் இப்பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி அமைத்து தரவேண்டும் என்றார்.

நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மண்டலத்தலைவர் மதிவாணன், பள்ளி செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.