செந்நிறமாக மாறிய புதுவை கடல்!

Filed under: புதுச்சேரி |

திடீரென புதுச்சேரி கடல் பகுதி செந்நிறமாக மாறியதால் புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் முதலில் பார்க்குமிடம் அழகிய கடற்கரை தான். கடற்கரையின் நீல நிறம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆனால் இன்று காலை திடீரென புதுச்சேரி கடல் நீரின் நிறம் செந்நிறமாக மாறியது. காலை 10 மணி முதல் கடல் நீர் படிப்படியாக மாறத் தொடங்கியது. சுமார் 200 மீட்டர் வரை செந்நிறமாக மாறியதை அடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்து வந்தனர். ஆற்றில் உருவாகும் ஒரு வகை பூஞ்சை காளான் கடலில் கலக்கும் போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு நீரின் நிறம் செந்நிறமாக மாறியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடல் நீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.