தமிழக டிஜிபியின் அதிரடி நடவடிக்கை!

Filed under: தமிழகம் |

டிஜிபியின் அதிரடி நடவடிக்கையால் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை, குற்றங்களை ஒழிப்பதற்காக திடீர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்திய காவல்துறை கஞ்சா, பான் பொருட்கள் பலவற்றை பறிமுதல் செய்ததுடன் பலரையும் கைது செய்தது. இந்நிலையில் தற்போது முக்கிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையை நடத்தியுள்ளது தமிழக காவல்துறை. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு “கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 133 முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆபரேஷனில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஏ ப்ளஸ் ரவுடிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை வழக்குகளில் நிலுவையில் இருந்த 15 பேர் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிடிபட்ட மற்ற 105 ரவுடிகளிடம் விசாரணை நடந்து வருகிறது” என கூறினார்.