வன உயிரின வார விழாவை முன்னிட்டு கடற்கரையில் விழிப்புணர்வு நடை பயணம்

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, அக் 4:
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (04.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் மூன்றாம் நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடைபயணத்தை, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் திருமதி கருணப்பிரியா, வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திரு.நாகநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வன உயிரின வாரவிழா கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை களைதல் போன்ற பணிகள் நடைபெறுவது தெரிவிக்கப்பட்டது.

புலிகள்/யானைகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கோடைகாலத்தில் வனவிலங்குகளுக்கு ஆங்காங்கு தண்ணீர் தொட்டி அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பதன் மூலம்தான் இயற்கை நம்மை காக்கும், நமக்கு தேவையான தூய்மையான காற்று, குடிநீர், தட்பவெப்பம் அமையும் என்பதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு இன்று நடந்த கடற்கறை நடை பயணத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என 165 பேர் பங்கேற்றனர். இத நடைபயணத்தில் கூடுதல் இயக்குநர்(சுற்றுச்சூழல்) திருமதி அர்ச்சனா கல்யாணி, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் திருமதி கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அலுவலர் திருமதி பிரியதர்ஷினி, சென்னை வன உயிரின காப்பாளர் திரு,ஈ.பிரசாந்த், செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் திரு.சண்முகம் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் திரு.ராம்மோகன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.