வன உயிரின வார விழா: சென்னையில் சைக்கிள் பேரணி

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, அக் 3:
சென்னை, பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று (03.10.2021) காலை, உயிரின வாரவிழாவை முன்னிட்டு, வனத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பேரணி நடந்தது. இதை, தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திடவும், வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட வனப்பணியாளகள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புலிகள்/யானைகள் காப்பக பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கோடை காலத்தில் வன விலங்குகளுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்திடவும், காட்டுத் தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் முயற்சியாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பேரணியை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் டிசர்ட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.அசோக் உப்ரேதி, கூடுதல் முதன்மை தலைமை (வன விலங்குகள்) பாதுகாவலர் திரு.ஆகாஷ் பர்வா, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திரு.நாகநாதன், சென்னை மண்டல வனப் பாதுகாவலர் திருமதி கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப் பாதுகாவலர் திருமதி பிரியதர்ஷினி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் திருமதி கருணப்பிரியா, சென்னை வன உயிரின காப்பாளர் திரு,இ.பிரசாந்த், கிண்டி தேசிய உயிரியல் பூங்கா வனச் சரக அலுவலர் திரு.கலைவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.